தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று போற்றப்படும் நடிகர் சிவாஜி கணேசனுக்கு பல நடிகர்கள் ரசிகர்கர்களாக இன்றும் இருந்து வரும் நிலையில், சிவாஜியே ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற அடைமொழியுடன் தனது வித்தியாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் சிவாஜி கணேசன். எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் தனது தனித்துவத்தை அமைத்து அந்த கேரக்டராகவே மாறி நடிக்கும் திறன் கொண்ட சிவாஜி கணேசனின் நடிப்பை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் பலரும் பின்பற்றி வருகின்றனர்.
எந்த ஒரு நடிகராக இருந்தாலும், அவருக்கென்று ஒரு நடிகர் இன்ஸ்பிரேஷன் இருப்பார். அந்த வகையில் அனைத்து கேரக்டர்களிலும் அசத்தும் திறன் கொண்ட சிவாஜி கணேசன் நடிக்கும்போது யாரை மனதில் நினைத்துக்கொள்வார்? அவரது இன்ஸ்பிரேஷன் யார் என்பதை அறிய நடிகர் சத்யராஜ் விரும்பியுள்ளார். ஒருமுறை சிவாஜி கணேசனுடன் நடித்த படத்தின் படப்பிடிப்பின்போது சத்யராஜ் அவரிடமே இந்த கேள்வியை கேட்டுள்ளார்.
இந்த கேள்விக்கு பதில் அளித்த சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா தான் எனது இன்ஸ்பிரேஷன், உங்கள் அனைவருக்கும் சினிமாவில் இரட்டை குரலில் பேசும் அந்த எம்.ஆர்.ராதாவை தான் தெரியும். ஆனால் அவருக்குள் ஒரு சிறந்த நடிகன் இருக்கிறான். அதை நான் நாடகத்தை பார்த்திருக்கிறேன். அவர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார். அதேபோல் சிவாஜி ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்துள்ளார். அந்த நடிகர் பின்னாளில் சிவாஜி நடிப்பில் பல படங்களை இயக்கியுள்ளார்.
அவர் தான் சிவாஜி நடிப்பில் முரடன் முத்து, கர்ணன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பி.ஆர்.பந்தலு. அடிப்படையில் நாடக நடிகரான இவர், பல கன்னட நாடகங்களில் நடித்துள்ளார். அதேபோல் கன்னடா மற்றும் தமிழ் திரைப்படங்களில் பலவற்றில் நடித்துள்ளார். அவரின் தீவிர ரசிகன் தான் நான். அவர் மேடையில் நடிக்கும்போது அவ்வளவு அற்புதமாக இருக்கும். அவரது நாடகங்களை நான் அந்த அளவுக்கு ரசித்து பார்த்திருக்கிறேன் என்று ஒரு பத்திரிக்கை பேட்டியில் சிவாஜி குறிப்பிட்டுள்ளதாக, இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“